பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன்
திரைப்பட வரலாற்றில் சில நிகழ்வுகள் புரிவதில்லை. அப்படியான ஒன்றுதான் ‛இது நம்ம ஆளு' திரைப்படம். இயக்குனராகவும், நடிகராகவும் புகழின் உச்சியில் இருந்த கே. பாக்யராஜ் நடித்த படம். படத்திற்கான கதையும் வசனத்தையும் அவரே எழுதியிருந்தார். ஆனால் இந்தப் படத்தை இயக்கியவர் எழுத்தாளர் பாலகுமாரன்.
கே பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் படங்களில் வசனம், திரைக்கதை, எழுதி வந்த எழுத்தாளர் பாலகுமாரன் முதன் முதலாக இயக்கிய படம். ஷோபனா, சோமயாஜுலு, மனோரமா குமரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் தனது வளர்ச்சிக்காக உயர்தர சமூகத்து இளைஞனாக வேடமிட்டு, அந்த சமூகத்து பெண்ணை திருமணம் செய்வதாக உருவான கதை.
நினைத்திருந்தால் பாக்கியராஜ் இந்த படத்தை இயக்கியிருக்க முடியும். படத்தை பாலகுமாரன் இயக்கியதற்கு இந்த வில்லங்கமான ஒரு கதையும் அடிப்படை காரணமாகும். பாலகுமாரனுக்கு பின்னால் நின்று பாக்யராஜ் கொடுத்த படம் என்றும் இதனை குறிப்பிடலாம்.
ஆனால் இது குறித்து இருவருமே எங்கேயும் வெளிப்படையாக பேசியதில்லை. என்றாலும் படம் பெரிய வெற்றி பெற்றது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. பெரிய சமூக மாற்றத்திற்கான படம் என்று அப்போது விமர்சனகளால் பாராட்டப்பட்டது.