நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாக்கூர்
நடிகை மிருணாள் தாக்கூர் மராத்தி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்தவர் கடந்த 2022ல் தெலுங்கில் வெளியான 'சீதாராமம்' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அந்த படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்த நிலையில் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார் மிருணாள் தாக்கூர். அதே சமயம் ஹிந்தியிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஹிந்தியில் 'டு தீவானே செஹர் மெய்ன்' என்கிற படத்தில் நடித்துள்ளார் மிருணாள் தாக்கூர். இந்த படத்தை இயக்குனர் ரவி உத்யவர் என்பவர் இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி 20ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் மிருணாள் தாக்கூர். கடந்த 2017ல் ஸ்ரீதேவி கடைசியாக நடித்த 'மாம்' திரைப்படத்தை இயக்கியவர் தான் இந்த ரவி உத்யவர்.
“அந்தப் படத்தைப் பார்த்து வியந்து போய் அந்த சமயத்தில் இயக்குனர் ரவி உத்யவரிடம் வரும் நாட்களில் நாம் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியிருந்தேன். இதோ இப்போது அவர் டைரக்ஷனிலேயே நடித்து விட்டேன். அதே சமயம் நானாக உங்களது படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தது துரந்தார் பட இயக்குனர் ஆதித்யா தர்ரிடம் தான். துரந்தர் படம் பார்த்துவிட்டு அவரை நேரில் சந்தித்தபோது அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்று நேரடியாகவே வாய்ப்பு கேட்டு விட்டேன். இது குறித்து கேட்பதற்கு நான் ஒருபோதும் வெட்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.