உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு

பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

இதற்கு முன்பு ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் எசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஎம்பி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரைத் திறந்து நடத்தி வருகிறார். அடுத்து பெங்களூருவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டும் பணியில் இறங்கினார்.

பெங்களூரு, காந்தி நகர் பகுதியில் 1968 முதல் செயல்பட்டு வந்த கபாலி தியேட்டரை வாங்கி 2020ல் அந்தத் தியேட்டரை இடித்து, அங்கு ஏஎம்பி சினிமாஸ் மல்டிபிளக்ஸ் தியேட்டரைக் கட்ட ஆரம்பித்தனர். கடந்த ஜனவரி மாதம் அந்தத் தியேட்டர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று தான் அந்தத் தியேட்டருக்கு மகேஷ்பாபு முதல் முறையாகச் சென்றார்.

தியேட்டர் செயல்பாடு குறித்து ஊழியர்களுடன் விவாதித்து ஆலோசனை சொன்னார். 9 திரைகள் கொண்ட அந்த மல்டிபிளக்ஸில் 'டால்பி சினிமா' என்ற அகன்ற திரை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் முதல் டால்பி சினிமா திரை இது. 588 இருக்கைகள் கொண்ட அந்தத் தியேட்டரின் திரை 65 அடி அகலமும், 27 அடி உயரமும் கொண்டது. 2.39 : 1 என்ற விகிதத்தில், இரட்டை 4கே ஆர்ஜிபி பியுர் லேசர் டால்பி விஷனில் அதன் திரையீடு இருக்கும். 64 ஆடியோ சானல்களுடன் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பில், அல்ட்ரா எச்டிஆர் வெளிச்சத்தில், 1,000,000 : 1, என்ற கருப்பு மாறுபாடு விகிதத்தில் ஒளி அமைப்புடன் படங்கள் திரையிடப்படும்.

ஐமேக்ஸ், எபிக் போன்ற பெரிய திரை தொழில்நுட்பத்தில் மற்றுமொரு வடிவம் இந்த டால்பி சினிமாஸ். சினிமா ரசிகர்களுக்கான தரமான அனுபவத்தைத் தரும் மற்றுமொரு சிறந்த தொழில்நுட்ப திரையீடு இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !