சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா
ராஜமவுலி இயக்கிய ‛பாகுபலி, பாகுபலி-2' படங்களில் அதிரடி வில்லனாக நடித்து மிரட்டியவர் ராணா. ‛பாகுபலி -2' படத்திற்கு பிறகு பெரிய அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராணா மீண்டும் உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தனது உடல்நிலை பாதிக்கப்பட்டபோது எழுந்து கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது எனது உடம்பில் கிட்னி செயல் இழந்து வந்தது. இதய துடிப்பில் பிரச்னை இருந்தது. ரத்த ஓட்டம் சீராக இல்லை. அதோடு பார்வையும் மங்க தொடங்கியது. இப்படி பல பிரச்னைகள் உடம்பில் இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள், 70 சதவீதம் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியதோடு, 30 சதவீதம் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்கள்.
இதனால் உடல் எடை பெரிய அளவில் குறைந்ததும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். அதையடுத்துதான் அமெரிக்காவில் கிட்னி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக உடல் பாதிப்பிலிருந்து முன்னேறி வந்தேன். சிகிச்சைக்கு பிறகு பழைய ராணாவிலிருந்து அடியோடு மாறிவிட்டேன். உடல்நலம் பாதிக்கப்பட்டபோது குத்துச்சண்டை சம்பந்தப்பட்ட படங்களை தவிர்த்தேன். இப்போதும் உடலை வருத்தி நடிக்கக்கூடிய வேடங்களை தவிர்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் ராணா. மேலும், உடல்பாதிப்புக்கு பிறகு தமிழில் ரஜினி நடித்த வேட்டையன் படத்தில் வில்லனாக நடித்த ராணா, பின்னர் காந்தா, பராசக்தி போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.