கேரளா ஸ்டோரி 2 வெளியீடு குறித்து வழக்கு, அடுத்தக்கட்ட நகர்வு என்ன
காமாக்யா நாராயண் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி 2 - கோஸ் பியான்ட்' படம் நாளை மறுதினம் பிப்ரவரி 27ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யுஏ 16 பிளஸ்' சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலத்தைத் தவறாக சித்தரித்து அவமானப்படுத்தும் விதத்தில் படம் இருக்கலாம் என்றும், இது சமூக பதற்றம் மற்றும் இணக்கமின்மையை ஏற்படுத்தலாம் என்று நான்கு தனி நபர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும், தணிக்கை வாரிய சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த வழக்கு நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் இன்று படத்தைக் காட்ட உத்தரவிட்டார். அதன்பின் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலில் இந்த வழக்கு பொதுநல வழக்கா அல்லது தனிப்பட்ட வழக்கா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். படத்தை நீதிமன்றத்திற்குக் காட்ட விருப்பமில்லையா என்று கேட்ட நீதிபதி வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார். இன்று வழக்கு மீண்டும் நடக்க உள்ள நிலையில் தான் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது தெரியும்.