சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
தயாரிப்பில் ராதிகா நடித்து இன்று (பிப்.,27) ரிலீசாகியுள்ள படம் 'தாய்
கிழவி'. சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். படத்தின் முதல் காட்சியை
படக்குழுவினர் மதுரையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் சென்று பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிவகார்த்திகேயன் கூறியதாவது: இது ஒரு
ஜனரஞ்சகமான படம். எல்லா வயதினரும் பார்ப்பதற்காக ஆசைப்பட்டு எடுத்த படம்
இது. இந்த படத்தின் இயக்குனர் மதுரை மண்ணைச் சேர்ந்தவர் என்பதால் இந்த
படத்தில் முதல்காட்சி மதுரையில் பார்க்க வந்தோம். இந்த படத்தில் சின்ன
சின்ன இடங்களை கூட சிரித்து ரசிக்கிறார்கள் நல்ல உணர்வுப்பூர்வமாக உள்ளது.
நல்ல விஷயத்தை சொல்வதற்கான வாய்ப்பு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது.
திருப்தியான படமாக இருக்கிறது என படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இந்த
பாராட்டுகள் திருப்தியை தருகிறது.
தாய் கிழவி என்பது ஆதி பெண்
தெய்வத்தை குறிக்கும், ஒரு பெண் வீட்டிற்கு எவ்வளவு முக்கியம் என்பதும்,
பெண்ணை ஒரு தெய்வத்துக்கு சமமாக நினைக்கிறார்கள் என்பதுதான் தாய் கிழவி
படம். பட்டப்படிப்பு படிக்காமல் குடும்ப நிர்வாகத்தை நிலைநிறுத்தக்கூடிய
பெண்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள் அதை சொல்கின்ற படம்தான்
தாய்கிழவி. இந்த படம் வேறு எங்காவது ஹிட் ஆனால் இதுவும் ஒரு பான் இந்தியா
படம் தான்.
நல்ல படத்தை, நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்ற
நோக்கத்தில் படங்களை தயாரித்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில்
சொல்ல முடியாத சில முயற்சிகளை என் தயாரிப்பின் மூலம் செய்கிறேன்.
சினிமாவில் இடையூறு
சினிமாவில்
எனக்கு சிலர் இடையூறு செய்வதாக சொன்னேன். யாருன்னு சொன்னால் அது யுடியூப்
சேனலுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா வியூஸ் கிடைக்கும். இதை சொல்வதற்கு காரணம்
இன்னொருவரை குறை சொல்வதற்காக அல்ல. இவ்வளவு பெரிய இடையூறை தாண்டி கடந்து வர
வேண்டும். இதனை மேடையில் சொல்வதற்கான காரணம் என்னை பிடித்தவர்களுக்கு
எனக்கு இடையூறு இருந்தும் அதை நான் தைரியமாக கடந்து வர முடிகிறது என்பதை
சொல்வதற்கு மட்டும் தான். இடையூறு செய்பவர்களை குறை சொல்வதென்றால்
சொல்லிவிடலாம் அழகாக அந்த நபர்களின் பெயரை சொல்லலாம், அது தலைப்பு
செய்தியாகிவிடலாம். வளர்ச்சியை குறிவைப்பது எல்லா துறைகளிலும்
எல்லாருக்கும் இருக்கும்.
விட்டுக்கொடுக்க மாட்டேன்
அடுத்து
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நான் நடிக்கும் 'சேயோன்' படமும் மதுரை
மண் சார்ந்த படமாக தான் இருக்கும். சினிமாவில் அரசியல் கருத்துகளை
புகுத்துவது எல்லா காலகட்டத்திலும் இருக்கிறது. அது தப்பும் கிடையாது.
சமூகத்தின் பிரதிபலிப்பு தான் சினிமா. தமிழ் சினிமாவில் சமூகத்தில்
நடக்கும் விஷயங்களை தைரியமாக சொல்வதற்கான சூழல் இருப்பது சந்தோஷமான
விஷயம். சினிமாவில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களை பற்றி நான் எல்லா இடத்தில்
சொல்வேன். இந்த படத்திற்கு கூட நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா,
ஜோதிகா என பலரும் பாராட்டினர். எனக்கு ஆதரவாக இருப்பவர்களை எந்த
நேரத்திலும் நான் விட்டுக்கொடுத்ததே கிடையாது.
வருத்தப்படாத
வாலிபர் சங்கம் படம் போன்ற படத்திற்கு நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.
அதுப்போன்ற படத்தை நான் தயாரிக்கிறேன், ஆனால் கதை எழுத வேண்டும். இவ்வாறு
அவர் கூறினார்.
அஜித்தை வைத்து தயாரிப்பு
அப்போது நடிகர்
அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு, ''நானே குட்டியாக ஒரு
கம்பெனி வைத்து படம் தயாரித்து வருகிறேன். அவ்வளவு பெரிய கம்பெனியாக
எங்கள் நிறுவனம் வளரவில்லை. வளர்ந்து, அஜித் சாரிடம் கேட்டு அவர் ஓகே
சொன்னால் பண்ணுவோம். ஆனால், அப்படியொன்று நடந்தால், நிச்சயம் அஜித்
ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடும் வகையில் தான் அந்த படம் இருக்கும்.
இப்போதைக்கு எனக்கு கிடைக்கும் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து,
நல்ல படமாக தயாரிப்பதே நோக்கம்'' என பதிலளித்தார்.
கமல் போல் சிவகார்த்திகேயன்
நடிகை
ராதிகா கூறுகையில், ''நான் நடிக்கும் எல்லா கேரக்டர்களும் சவாலாகவே
பார்க்கிறேன். இந்த மண் சார்ந்தது இயக்குனர் பாரதிராஜா அவர்களால் எனக்கு
கிடைத்தது. அவருடைய தாயாரை வைத்து தான் இந்த கதாபாத்திரத்தை
மையப்படுத்தினோம். பெண்களுக்கு முக்கியமான படமான இதில் ஒவ்வொரு தருணமும்
மறக்க முடியாத அனுபவம். நடிகர் கமல்ஹாசன், சினிமாவில் சம்பாரித்த பணத்தை
எல்லாம் சினிமாவில் தான் போட்டார். அதுபோல, சிவகார்த்திகேயனும்
தயாரிப்பில் போட்டு இதுபோன்ற படங்களை கொடுக்கிறார்'' என்றார்.