நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி
சர்வதேச கிரிக்கெட் நடுவராக இருப்பவர் அனில் சவுத்ரி. இவர் தற்போது நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். ஹரியான்வி கேங்ஸ்டர் கீதமான கோலி தோ சலேகி என்ற இசை ஆல்பம் மூலமாக நடிப்பு களத்தில் இறங்கியுள்ளார். பிரபல ஆடை வடிவமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சுமன் குஹா இயக்கியுள்ளார். எபிக் பிலிம்ஸ் சார்பில் நரேஷ் ஜா தயாரித்துள்ளார்.
டயமண்ட் என்பவர் பாடிய இந்த இசை வீடியோ, சினிமா பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரோஹித் கர்ப், சாந்தினி ரவுத், ஹேமேஷ் தீட்சித் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.
கேமரா முன் தனது முதல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனில் சவுத்ரி, நான் தொடர்ந்து ஹரியான்வியில் வர்ணனை செய்வதால் கேமராவை எதிர்கொள்ளும்போது எனக்கு பதட்டமாக தெரியவில்லை. சுமன் குஹா என்னிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவினார். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர் நரேஷ் ஜாவுக்கும் நன்றி. படப்பிடிப்பை நான் மிகவும் ரசித்தேன். நடுவராகவும் நடிப்பவராகவும் இருப்பது அவற்றின் தனித்துவமான வசீகரத்தைக் கொண்டுள்ளது என்றார்.