கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன்
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு தாக்குதல் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகள் எங்கும் வெடிகுண்டு ஏவுகணை சத்தங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் உள்ள நகரங்களில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கிருந்து இந்தியாவிற்கு கிளம்பி வர முடியாத சூழலில் பலரும் சிக்கித் தவிக்கின்றனர். பெங்களூரில் இருந்து துபாய் விமான நிலையம் மூலமாக அமெரிக்காவிற்கு பயணித்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து கூட தற்போது துபாயில் சிக்கிக் கொண்டுள்ளார். இதே போல தான் அமெரிக்காவுக்கு பயணித்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கடைசி நிமிடங்களில் தான் கத்தாரில் இருந்து தப்பித்ததாக தனது திகில் அனுபவத்தை பதிவிட்டுள்ளார்.
சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு கிளம்பிச் சென்ற சந்தோஷ் நாராயணன் கத்தாரில் இருந்து டிரான்சிட் விமானம் மூலமாக அமெரிக்க பயணத்தை மேற்கொண்டிருந்தார். பல விமான நிலையங்கள் மூடப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் கத்தாரில் இருந்து சந்தோஷ் நாராயணன் பயணித்த விமானம் இந்த கட்டுப்பாடு அறிவிப்புகள் வருவதற்கு கொஞ்சம் முன்னதாகவே கிளம்பியதால் கத்தாரில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்ததாக கூறியுள்ள சந்தோஷ் நாராயணன், அந்தந்த பகுதியில் இருக்கும் சகோதர சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.