பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு
80களில் அறிமுகமாகி வேகமாக வளர்ந்த முன்னணி இயக்குனர்களுக்கு சிவாஜியுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்பது பெரும் கனவாகவே இருந்தது. அவரது இயல்பான நடிப்பை வெளியில் கொண்டு வந்து அதன் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்த விரும்பினார்கள். அப்படித்தான் பாரதிராஜா 'முதல் மரியாதை'-யை இயக்கினார், கே.பாக்யராஜ் 'தாவணிக் கனவுகள்' படத்தை இயக்கினார். கே.எஸ்.ரவிகுமார் 'படையப்பா' படத்தை இயக்கினார், கமல்ஹாசன் தேவர் மகன் படத்தை உருவாக்கினார்.
இப்படியான ஒரு ஆசை பாலுமகேந்திராவிற்கும் இருந்தது. சிவாஜிக்கென்றே கதை தயார் செய்து அதனை சிவாஜியிடம் சொன்னார். அது சிவாஜிக்கும் பிடித்து விட்டது. சின்ன கதை, படப்பிடிப்பு முழுக்க ஊட்டியில், சிறிய பட்ஜெட் நானே தயாரிக்கிறேன் என்று சிவாஜியும் ஒப்புக் கொண்டார். படத்தை இயக்க பாலுமகேந்திராவிற்கு முன்பணமும் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் முதல் கட்டத்திலேயே முடிந்து விட்டது. சிவாஜி குடும்பத்தில் உள்ளவர்களே இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக அப்போது தகவல்கள் வெளியானது.
ஊட்டியில் ஒரு பெரிய எஸ்டேட்டுக்கு சொந்தமான ஒருவர் 70 வயதை தாண்டியும் அந்த எஸ்டேட்தான் கதி என்று வாழ்கிறார். அந்த எஸ்டேட்டில் பணிபுரியும் ஊழியர்கள்தான் அவர் குடும்பம். தனக்கு பின்னால் எஸ்டேட் முழுவதையும் தனது ஊழியர்களுக்கே பிரித்து கொடுத்து விடும் முடிவில் இருக்கிறார்.
இதை அறியும் அவரின் தூரத்து உறவினர்கள் சிலர், திட்டமிட்டு அவரது உதவியாளராக ஒரு இளம் பெண்ணை அனுப்பி வைக்கிறார்கள். அந்த பெண் எப்படியாவது அவரை தனது வலையில் வீழ்த்தி சொத்ததை அபகரிக்க வேண்டும் என்பதே அந்த திட்டம். அது நிறைவேறியதா? என்பதுதான் கதை என்றும் இந்தக் கதை கொஞ்சம் சறுக்கினாலும் தவறாக போய்விடும் என்று கூறி சிவாஜி நடிப்பதை தடுத்து விட்டதாக சொல்வார்கள்.