ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது
கடந்த 2017 ஹிந்தியில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளியான படம் 'மாம்'. இந்த படத்தை ரவி உத்யவர் என்பவர் இயக்கியிருந்தார். அக்ஷய் கண்ணா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 175 கோடி வரை வசூலித்து வரவேற்பு பெற்றது. ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான கடைசி படமும் இதுதான். அவரது மறைவிற்கு பின் அடுத்த வருடமே வழங்கப்பட்ட 65வது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகைக்கான விருதையும் ஸ்ரீதேவிக்கு இந்த படம் தேடி தந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தனது மகள் ஜான்வி கபூர் நடிப்பில் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூருக்கு இருந்தது. அந்த வகையில் தற்போது மாம் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நொய்டாவில் உள்ள பிலிம் சிட்டியில் துவங்கியுள்ளது. முதல் பாகத்திற்கு கதை திரைக்கதை எழுதிய கிரிஷ் கோஹில் என்பவர் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இப்படத்தில் பெங்காலி நடிகர் ஆன ஜிஷு சென்குப்தா மற்றும் டெலிவிஷன் நடிகையான கரிஷ்மா டன்னா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிக்கிறாரா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.