உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தவறான கோணங்களில் புகைப்படம் எடுப்பதா : ருக்மணி வசந்த் கண்டனம்

தவறான கோணங்களில் புகைப்படம் எடுப்பதா : ருக்மணி வசந்த் கண்டனம்

இந்தியத் திரையுலகத்தில் பல திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொள்ளும் நடிகைகள் பொதுவாக கொஞ்சம் கிளாமரான ஆடைகளை அணிந்து வருவது வழக்கம்.

சமீபகாலங்களில் நடிகைகள் வரும்போது அவர்களை நெருங்கி மொபைல் போன்கள் மூலம் வீடியோ எடுப்பது அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் வீடியோக்கள், ஷார்ட்ஸ் வீடியோக்கள் என அவற்றைத் தங்களது தளங்களில் பதிவிடுவதை சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அம்மாதிரியான புகைப்படங்கள், வீடியோக்கள் தவறான கோணங்களிலும் எடுக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு ஏற்கெனவே இருக்கிறது. இந்நிலையில் நடிகை ருக்மணி வசந்த் இது குறித்து அவரது கண்டனப் பதிவை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ளார்.

“திரைத்துறையில் பெண்களாக நாங்கள் ஒன்றிணைந்து, தொடர்ச்சியாக ஏற்படும் ஒரு பிரச்னையை விவாதிக்கிறோம். பொது நிகழ்ச்சிகளில் பெண் நடிகைகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தவறான கோணங்களில் படம் பிடிக்கப்பட்டு, எங்கள் உடல்களை மையப்படுத்திய தேவையற்ற ஜூம்களுடன் பரப்பப்படுகின்றன.

இந்த நடத்தை சில தனிநபர்களால் செய்யப்படும், அவமரியாதையானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் எங்கள் தொழிலுக்காக, சினிமாவுக்காக இங்கு இருக்கிறோம். திட்டமிட்ட ஜூம்கள் மற்றும் தவறான கோணங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவை கவுரவத்தின் தெளிவான மீறல்கள் மற்றும் இயல்பாக்கப்படவோ அல்லது சகித்துக் கொள்ளப்படவோ மாட்டாது. நிகழ்ச்சிகளை படம்பிடிக்கும் அவர்களிடம் தொழில்முறை, அடிப்படை மரியாதை மற்றும் அன்பை எதிர்பார்க்கிறோம்.

இந்த எல்லையை அமைப்பதில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம். இதை அனுபவித்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் சேர்ந்து நிற்கிறோம் - மேலும் மரியாதையை கோருவதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதை தொடர்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ருக்மணி வசந்த் கலந்து கொண்ட போது அவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !