போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ‛கேஜிஎப்' புகழ் யஷ் நடித்துள்ள பான் இந்தியா படம் ‛டாக்சிக்'. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுட்டாரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாலிவுட் ஸ்டைலில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. கன்னடம், ஆங்கிலத்தில் நேரடியாகவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்தும் படத்தை வெளியிட உள்ளனர்.
இப்படத்தின் அறிமுக வீடியோ, அதன்பின் வெளியான டீசர் ஆகியவை சர்ச்சைகளை கடந்து வரவேற்பை பெற்றன. நேற்று படத்தின் முதல் பாடலும் வெளியானது. மார்ச் 19ல் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதுபற்றி படத்தை தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛டாக்சிக் படத்தை உலகளாவிய வெளியீடாக உருவாக்கி உள்ளோம். மார்ச் 19ல் படத்தை வெளியிட இருந்தோம். ஆனால் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் போர் பிரச்னை) நிலவும் அசாதாரண சூழலால் இப்படத்தை உலகளவில் கொண்டு செல்ல முடியாத சூழலில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் படத்தை தள்ளி வைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதன்படி படத்தை ஜூன் 4ல் வெளியிட உள்ளோம். இதை ரசிகர்கள் உட்பட அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். தொடர்ந்து உங்களின் அன்பு, ஆதரவுக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளனர்.