'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார்
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான 'காந்தாரா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சப்தமி கவுடா. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் கூட நடித்து வருகிறார் சப்தமி கவுடா. சமீபத்தில் இவர், “பல விழாக்களுக்கு நடிகைகள் வருகை தரும்போது சில புகைப்படக்காரர்கள் தேவையில்லாத ஆபாசமான கோணத்தில் புகைப்படங்களை எடுத்து அவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். நாங்களும் பெண்கள் தான்.. நடிப்பு எங்களுக்கு ஒரு தொழில்.. எங்கள் கலையை விட எங்கள் உடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. இது வெட்கக்கேடானது. இது ஏற்றுக் கொள்ளவும் முடியாதது. எங்களுக்கும் அடிப்படை மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார், சப்தமி கவுடாவின் கருத்துக்கு ஆதரவாக தனது குரலை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர்கள் ஒன்றும் பொருட்கள் அல்ல.. இன்றும் கூட பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று மக்களிடம் சொல்ல வேண்டிய துரதிஷ்டமான நிலை தான் இருக்கிறது. தயவுசெய்து எந்த விதத்திலும் சமரசப்படுத்திக் கொள்ளாத வகையில் பெண்களுக்கான மரியாதையை உறுதி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.