பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த்
எம் ஜி ஆரை வைத்து அதிக அளவில் படங்களை தயாரித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையான ஒன்றுதான் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் அவர்களின் “தேவர் பிலிம்ஸ்” பட நிறுவனம். “தாய்க்குப் பின் தாரம்” தொடங்கி “நல்ல நேரம்” வரை எம் ஜி ஆர் நாயகனாக நடித்து இவர்கள் தயாரித்திருந்த திரைப்படங்களின் எண்ணிக்கை 16. படத்தின் பூஜையின் போதே படத்தின் வெளியீட்டு நாளையும் அறிவித்து, துள்ளியமான திட்டமிடலோடு செயல்பட்டு வந்த இந்த “தேவர் பிலிம்ஸ்” தயாரிப்பு நிறுவனத்திற்காக எம் ஜி ஆர் நடிக்க இருந்த மற்றுமொரு திரைப்படம்தான் “மறுபிறவி”.
1960களின் இறுதியில் எம் ஜி ஆர் இரட்டை வேடங்களில் நடிக்க, “தேவர் பிலிம்ஸ்” தயாரிக்க இருந்த இத்திரைப்படம், எம் ஜி ஆரின் உடல்நலம் பாதிப்பு காரணமாகவும், அப்போது அவர் எதிர்கொண்டிருந்த சட்ட வழக்குகளை மனதிற் கொண்டும், படப்பிடிப்பை ஆரம்பிக்க முடியாமல் படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் எம் ஜி ஆர் தமிழக முதல்வராகி, நடிப்பிலிருந்து விலகியிருந்த 1970களின் இறுதியில் “தாய் மீது சத்தியம்” என்ற புதிய தலைப்பில் இத்திரைப்படத்தின் கதையை மீண்டும் உருவாக்கினார் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர்.
எம் ஜி ஆருக்குப் பதிலாக நடிகர் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கத்திய 'கவ்பாய்' பாணியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “தாய் மீது சத்தியம்”. சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் தயாரித்த இறுதி திரைப்படமாக வெளிவந்ததும் இத்திரைப்படமே. இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் இயற்கை எய்தினார்.
ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, மோகன் பாபு, 'டைகர்' பிரபாகர், ஜெயமாலினி, ஏ வி எம் ராஜன், அம்பரீஷ், சுருளிராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் ஆர் தியாகராஜன் இயக்கத்தில், 1978ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த “தாய் மீது சத்தியம்” திரைப்படம் திரையரங்குகளில் 100 நாள்களையும் கடந்து ஓடி, வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுத் தந்தது “தேவர் பிலிம்ஸ்” நிறுவனத்திற்கு.