சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி'
மலைவாழ் மக்களின் பிரச்னைகளை புதிய கோணத்தில் சொன்ன படம் 'வெள்ளக்குதிர'. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி இருந்தார். இவரின் அடுத்த படம் 'மண்டவெட்டி'. இதில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் கதை சொல்கிறதாம்.
பெரும்பாலான படப்பிடிப்பை தினமும் 100 கிலோமீட்டர் பயணம் செய்து நடத்தினார்களாம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் பலரும் இந்தத் படத்தில் நடித்து இருக்கிறார்கள். ''கிராம மயானத்தில் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியது படக்குழுவிற்கு சவாலான அனுபவம். கதையில் முக்கிய அங்கம் வகிக்கும் கற்பனையான உள்ளூர் தெய்வ கதாபாத்திரமான 'செஞ்சி' தனித்துவமிக்க ஆன்மிக அம்சத்தையும் கொண்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் அந்த தெய்வம் அருள் வழங்கி தங்களை பாதுகாப்பாக வழிநடத்தியது. மண்டவெட்டி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் தலைப்பிற்கான அர்த்தம் அறிவிக்கப்படும்'' என்கிறது படக்குழு.