நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ்
கடந்த 2014ம் ஆண்டு மலையாள நடிகை ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, அதை மொபைலில் படமாக்கி வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். இது குறித்து நடிகை அளித்த புகாருக்கு பிறகு நடந்த விசாரணையில் அந்த சம்பவத்தின் பின்னணியில் மலையாள நடிகர் திலீப் இருப்பதாக தெரிய வந்தது. அதையடுத்து கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
8 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரனை நடைபெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடிகர் திலீப் மீதான குற்றத்தை நிரூபிக்க கூடிய ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. என்றாலும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 6 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நடிகர் திலீப்பை நீதிமன்றம் விடுதலை செய்த தீர்ப்பை திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்தார்கள்.
இப்படியான நிலையில், தற்போது இந்த பாலியல் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரளா அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் சரியான முறையில் விசாரிக்கவில்லை . குற்றத்தை நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்கள் வெளியிட்ட பிறகும் அதை சரியானபடி பரிசீலனை செய்யாமல் அவரை நிரபராதி என்று விடுவித்து விட்டார்கள். அதனால் இந்த வழக்கை மீண்டும் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேரளா அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது . இதையடுத்து நீதிமன்றம் மீண்டும் நடிகர் திலீப் உள்ளிட்ட நான்கு பேருக்கு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.