பிளாஷ்பேக்: தன் படத்தை பார்க்க விரும்பாத விஜயகாந்த்
விஜயகாந்த் தொடர்ச்சியாக எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது சந்திரசேகரின் உதவியாளராக இருந்த செந்தில்நாதனை விஜயகாந்திற்கு மிகவும் பிடிக்கும். அவரது பணிவு, கடும் உழைப்பு அவருக்கு பிடித்து விட்டது. அவருக்கு ஒரு படம் நடித்து கொடுத்து அவரை இயக்குனராக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஒரு நாள் செந்தில்நாதனை அழைத்து “நான் ஒரு படம் நடித்து தருகிறேன். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு நல்ல கதை எழுதி கொண்டு வா” என்று சொல்லி அவருக்கு ஒரு ஓட்டலில் அறையும் புக் செய்து கொடுத்தார். சில வாரங்களில் செந்தில்நாதன் கதையோடு வந்தார். அந்த கதையும் விஜயகாந்திற்கு பிடித்து விட்டது. செந்தில்நாதனுக்கு ஒரு தொகை முன்பணமாகவும் கொடுக்கப்பட்டது.
அப்போது விஜயகாந்த் 'காலையும் நீயே மாலையும் நீயே' படத்தில் நடித்து வந்தார். செந்தில்நாதனுக்கு முன்பணம் கொடுத்த அன்று படப்பிடிப்பில விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் சகுணம் சரியில்லை என்று கூறி இந்த படத்தை டிராப் பண்ணிடலாம் என்று ராவுத்தர் கூறினார். அதற்கு விஜகாந்த் மறுத்து விட்டார்.
படப்பிடிப்புகள் நடந்தபோது படத்தில் இளம் ஜோடிகளாக நடித்த ஆனந்த், வாணி விஸ்வநாத் காட்சிகள் படமானபோது விபத்து ஏற்பட்டு ஆனந்த் படுகாயம் அடைந்தார். இதனால் 2 மாதங்கள் படம் தடைபட்டது. ஒருவழியாக படம் முடிந்து இளையராஜாவிடம் பின்னணி இசைக்காக ஒப்படைக்கப்பட்டது. படத்தை பார்த்த இளையராஜா 'இந்த படத்திற்கு ரீ ரிக்கார்டிங் பண்ணுவதே வேஸ்ட்' என்று சொன்னதாக ஒரு தகவல் பரவ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்க தொடங்கினார்கள். இதனால் கோபம் அடைந்த விஜயகாந்த் இளையராஜாவை சந்தித்து படம் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நீங்கள் இசை அமைத்து கொடுங்கள் என்று கூறிவிட்டார்.
பின்னணி இசை கோர்ப்பு முடிந்ததும் படத்தின் பிரிவியூ ஷோ போடப்பட்டது. மிகுந்த மன உளைச்சலில் இருந்த விஜயகாந்த் அந்த ஷோவிற்கு போகவில்லை. காரணம் படத்தை பார்க்க அவர் விரும்பவில்லை. ஷோ முடிந்ததும் விஜயகாந்திற்கு போன் கால்கள் பறந்தது. சார் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும், நீங்க பிரமாதமாக நடிச்சிருக்கீங்க என்றது போன்கால்கள்.
அதன்படியே படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வெள்ளி விழா கொண்டாடியது. அந்த படம் 'பூந்தோட்ட காவல்காரன்'.