சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக்
மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பிரியதர்ஷன். விரைவில் தனது நூறாவது படத்தை மோகன்லாலை வைத்து இவர் இயக்க இருக்கிறார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் இவர் அவ்வப்போது படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ‛பூத் பங்களா' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ஏற்கனவே ஹிந்தியில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற ஹேராபெரி என்கிற படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருக்கிறார் பிரியதர்ஷன். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் ஒரு படத்தின் சீக்வல்களை உருவாக்குவது குறித்து தனது பார்வையை வெளிப்படையாகவே கூறியுள்ளார் பிரியதர்ஷன்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் எப்போதுமே என்னுடைய படங்களுக்கு சீக்வல் உருவாக்குவதை விரும்பவில்லை. காரணம் அந்த ஒரிஜினல் கதையை உருவாக்குவதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன் என்பது எனக்குத் தான் தெரியும். அதுமட்டுமல்ல சில நேரங்களில் ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் டைட்டிலை சம்பந்தமே இல்லாமல் அதற்கு தொடர்பில்லாத இன்னொரு கதைக்கு இரண்டாம் பாகம் என்கிற பெயரிலும் பயன்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறார்கள். அந்த வகையில் என்னை பொறுத்தவரை ஒரு படத்திற்கு சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான். முதல் பாகத்தை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் ஒரு வேலை தான்” என்று கூறியுள்ளார் பிரியதர்ஷன்.