ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை
ஆஸ்கர் விருது விழாவில் உலக அளவில் மறைந்த சினிமா கலைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். நேற்று நடந்த 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அந்த நினைவஞ்சலி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நடிகரான தர்மேந்திரா மற்றும் சில ஹாலிவுட் சினிமா கலைஞர்கள் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்ட 15 நிமிட நினைவஞ்சலி வீடியோவில் புறக்கணிக்கப்பட்டனர். இது குறித்து தர்மேந்திராவின் மனைவி ஹேமமாலினி, “நிச்சயமாக, இது வருத்தத்திற்குரிய விஷயம். உலகின் பல பாகங்களிலுள்ள எண்ணற்ற மக்களுக்குப் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடிகரை அவர்கள் புறக்கணித்தது மிகவும் வருந்தத்தக்கது. தரம்ஜி எங்கும் அறியப்பட்டவராகவும், எங்கும் அங்கீகரிக்கப்பட்டவராகவும் திகழ்ந்தார்,” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆஸ்கர் தரப்பில் ஒளிபரப்பு பொறுப்பு அதிகாரி ராப் மில்ஸ், “முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் 15 நிமிடங்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஆம், எப்போதும் யாரேனும் ஒருவர் விடுபட்டுப் போவது இயல்புதான். துரதிர்ஷ்டவசமாக நாம் ஆண்டுதோறும் அதிகமானோரை, குறிப்பாக பல ஜாம்பவான்களை இழந்து வருகிறோம். இத்தகைய சூழலில் அனைவரையும் உள்ளடக்கிச் செயல்படுவது அனேகமாக மிகக் கடினமான ஒரு விஷயமாக இருக்கும். நேற்றிரவு நடந்த ஆஸ்கர் விழாவில், ஆஸ்கர் வரலாற்றிலேயே இதுதான் மிகச் சிறந்த ஒன்றாக அமைந்திருக்கக் கூடும் என்று நான் உறுதியாகக் கருதுகிறோன்,” என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் ஆஸ்கர் இணையதளத்தின் நினைவஞ்சலி பக்கத்தில் விடுபட்ட நபர்களைச் சேர்த்துள்ளார்கள். அதில் நடிகை சரோஜா தேவி, நடிகர்கள் தர்மேந்திரா, மனோஜ்குமார், கோட்டா சீனிவாச ராவ், டாகுமெண்டரி தயாரிப்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.