உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு

பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு

தமிழ் திரைப்பட வரலாற்றில், ஒரு தனித்துவமான தலைசிறந்த படைப்பின் மூலம் மட்டும் அல்லாது, பல தசாப்தங்கள் கடந்தும் மொழிகள், மாநிலங்கள், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் காலகட்டங்களைத் தாண்டியும் மக்களின் நம்பிக்கையை இழக்காமல் இயங்கிய இயக்குநர்கள் சிலரே. அத்தகைய அரிதான இயக்குநர்களில் கே.சங்கர் முக்கியமானவர்.

எடிட்டிங் அறையில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.

7ம் வகுப்பு வரை மட்டுமே படித்த சங்கர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். 1939ம் ஆண்டு கோயம்புத்தூரிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவில் எடிட்டிங் உதவியாளராக சேர்ந்தார். கதைகள் எவ்வாறு காட்சி வடிவம் பெறுகின்றன என்பதை நேரடியாகக் கண்டு கற்றார்.

பின்னர் ஏவிஎம் நிறுவனத்தில் பணியாற்றினார். ஏ.வி.எம். நிறுவனத்தின் காரைக்குடி ஸ்டுடியோவில் 'வேதாள உலகம்' படப்பிடிப்பு நடைபெறும் போது ஏற்பட்ட தீ விபத்து, கே. சங்கரின் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. தீ பரவிய நிலையில் எடிட்டிங் அறைக்குள் ஜன்னல் வழியாக நுழைந்து, பட நெகட்டிவ்களை காப்பாற்றிய சம்பவம் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் கவனத்தை ஈர்த்தது. அதன்பின் தன் கடின உழைப்பின் அங்கீகாரமாக இயக்குநராகவும் உயர்ந்தார்.

கே.சங்கரின் தனித்திறமையே புராண படங்கள்தான். புராணக் கதைகளை பிரமாண்ட காட்சியமைப்புடன் திரையில் கொண்டு வந்ததில் சங்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கிய கன்னடப் படம் 'பூகைலாசா' இதற்குச் சிறந்த உதாரணம். இந்த படம் கன்னடத்தில் ஒரு வருடம் தாண்டி ஓடி சாதனை படைத்தது.

சிவாஜியுடன்'ஆலயமணி' (1962), 'ஆண்டவன் கட்டளை' (1964) . எம்.ஜி. ஆருடன் 'பணத்தோட்டம்' (1963), 'கலங்கரை விளக்கம்' (1965), 'குடியிருந்த கோவில்' (1968), 'அடிமை பெண்' (1969) ஆகியவை வெள்ளி விழா படங்களானது. சங்கர் இயக்கிய 'சிவகங்கை சீமை' தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இப்போதும் இருக்கிறது. எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ் , ஜெயலலிதா ஆகிய 3 முதல்வர்களை இயக்கிய பெருமை சங்கருக்கு உண்டு.

'தாய் மூகாம்பிகை' (1982), 'வருவான் வடிவேலன்' (1978), 'நம்பினார் கெடுவதில்லை' (1986), 'வேலுண்டு வினையில்லை' (1987), 'நவகிரக நாயகி' (1985) போன்ற படங்கள் அவரை பக்திப் படங்களின் நம்பகமான இயக்குநராக நிலைநிறுத்தின. அதேபோல் 'முப்பெரும் தேவியர்' (1987), 'வெற்றி விநாயகர்' (1996), 'தேவி தரிசனம்' (1981), 'ஆயிரம் கண்ணுடையாள்' (1986), 'மணிகண்டன் மகிமை' (1993) போன்ற படங்களும் அவரது பக்திப் படைப்புகளின் தொடர்ச்சியாக அமைந்தன.

கே.சங்கர் புரட்சிகரமான படங்கள் எதையும் இயக்கியவர் அல்ல. ஆனால் திரைப்படங்கள் மூலம் அன்பு, பாசம், வீரம், பக்தி இவற்றை சொன்னவர். வசன ஊடகமாக இருந்த சினிமாவை காட்சி ஊடகமாக்கியவர்களில் முக்கியமானவர். பிற்காலத்தில் வந்த ஷங்கர் எப்படி பிரமாண்ட இயக்குனரோ அவருக்கு முன்னோடி இருந்தவர் இந்த சங்கர்.

1926ம் ஆண்டு இதே நாளில் (மார்ச் 17) பிறந்த சங்கருக்கு இது நூற்றாண்டு. அவரது நினைவைப் போற்றுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !