உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன்

'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன்

தமிழில் இயக்குனர், நடிகர் என ரசிகர்களால் அறியப்பட்ட, சில படங்களுக்காக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பார்த்திபன் தெலுங்கில் நடித்துள்ள படம் 'உஸ்தாத் பகத் சிங்'. பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்த அந்தப் படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய பார்த்திபன், 'நான் ஒரு நாயுடு பையன்' என சாதிப் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று சமூக வலைத்தளங்களில் அவருக்கு ரசிகர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர்.

தான் பேசியது குறித்து குரல் மூலம் ஒரு விளக்க வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில், “என் பேச்சு யார் மனதையாவது உண்மையிலேயே கீறி புண்படுத்தி இருந்தால் வருத்தம் தோய்ந்த மன்னிப்பைத் தெரிவித்து இப்பிரச்சினையை விட்டுவிட்டு இப்பொழுதை நற்பொழுதாக்கிக் கொள்ள வேண்டிக் கொள்கிறேன்.

நான் வாழ்க்கைப்பட்டிருப்பது தமிழுக்கு. சோறு, சுகம் யாவும் தமிழே தந்தது. போகும் வரை சொர்க்கம் தமிழே. இதை என்றும், எங்கும், ஏன் உலகெங்கும் பெருமையாய் உரக்கச் சொல்வேன். என் தாய்மொழி தெலுங்குதான் என்பதை அங்கு மட்டுமல்ல, இங்கும், இன்று மட்டுமல்ல, நேற்றும் முன்தினமும் சொல்லி இருக்கிறேன். தமிழ் உயர்ந்ததும் உன்னதமும் ஆனது மட்டுமல்ல, அன்பும் கருணையும் நிறைந்தது,” என தமிழை உயர்த்திப் பேசி இருக்கிறார்.

'உஸ்தாத் பகத் சிங்' விழாவில் மிகுந்த டென்ஷன். பதட்டத்தில் இருந்ததால் தெலுங்கில் எனக்கு சரியாக பேச வராது. வார்த்தைகளை கவனமாகக் களமிறக்க முடியாததால் வேர்க்க வேர்க்க பேசிவிட்டு இறங்கிவிட்டேன். எனவே, இதை ஆரம்பித்தவர்களே அன்போது முடித்துவிடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனாலும், சாதி பெயரைக் குறிப்பிட்டுப் பேசியது தவறுதான் என எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை. அதைப் பற்றிப் பேசுவதை மட்டும் கவனமாகத் தவிர்த்து, மொத்தமாக தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !