ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம்
'காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' என்ற வரிகள் அடுத்த பல ஆண்டுகளுக்கு தமிழக அரசியலில் முக்கியமான வரிகளாக அமையும்.
நடிகர் ரஜினிகாந்த் பற்றி, விஜய்யின் தவெக கட்சியின் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் சில கருத்துக்களைப் பேசியிருந்தார். அது ரஜினி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அது குறித்து பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதவ் அர்ஜுனாவிற்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினர். தனக்கு ஆதரவாகப் பேசிய அந்தத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாபக் பகிரப்பட்டு வருகிறது. அரசியல் பற்றிய தனது கருத்துக்களைப் பதிவு செய்வதை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வந்தார் ரஜினிகாந்த். யார் அவரைப் பற்றி விமர்சித்தாலும் அதை கண்டும் காணாமல் இருந்து வந்தார்.
விஜய் ரசிகர்கள் சமீப காலங்களில் ரஜினி பற்றியும், அவரது ரசிகர்கள் பற்றியும் விமர்சித்து வந்தார்கள். ரஜினியை விடவும் விஜய் பெரிய நடிகர், விஜய்யின் படங்களின் வசூல், ரஜினி படங்களின் வசூலை விட அதிகம் என்ற ரீதியில் அவர்களது வாதங்கள் இருந்தது. இது ரஜினி ரசிகர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அவரது ரசிகர்களும், கட்சியினரும் தேவையில்லாமல் ரஜினி பற்றிய கருத்துக்களைப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
அப்படித்தான் கடந்த வாரம் ஆதவ் அர்ஜுனா, தேவையில்லாமல் ரஜினி பற்றி பேசியிருந்தார். அதற்கு ரஜினி தரப்பிலிருந்து எந்த கண்டனமும் வராமல் இருந்தது. இருந்தாலும் தனக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலை முதல் முறை சந்திக்க உள்ள விஜய் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பும், ரஜினியின் அறிக்கையும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் விஜய் கட்சிக்கு ரஜினியின் எதிர்ப்பு இருக்கிறது என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இனி, விஜய் கட்சியினர் யார் ரஜினி பற்றி பேசினாலும் அதற்கு தரமான பதிலடி கிடைக்கும் என ரஜினி ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.