நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்
அதிமுக., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பங்கேற்று பேசும்போது, ‛‛அப்துல் கலாம் கனவை காணுங்கள் என்றார். ஆனால் இவர்(முதல்வர் ஸ்டாலின்) உங்கள் கனவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் என்கிறார். ஆமாம் எனக்கு நயன்தாரா வேணும், கனவை நிறைவேற்றுவாரா... நயன்தாராவை கல்யாணம் பண்ணி வை என்பான், பண்ணி வைப்பாரா'' என பேசினார். இது சர்ச்சையானது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சிவி சண்முகம். அதில், ‛‛நயன்தாராவின் பேச்சு தவறுதலாக உச்சரிக்கப்பட்டுவிட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். நான் சொல்ல வந்த கருத்து வேறு, ஆனால் தவறுதலாக அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுவிட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.