பிளாஷ்பேக்: 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டு காணாமல் போன நடிகர்
தமிழ் சினிமாவில் கரிக்கோல் ராஜு என்ற பெயரை கேள்விப்பட்வர்களுக்குகூட அவரின் அடையாளம் நினைவிருக்காது. விருதுநகரில் பிறந்த இவர் நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். குணசித்ரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக கிராமத்து வேடங்கள், பஞ்சாயத்து தலைவர் வேடங்களில் அதிகம் நடித்தவர்.
1951ம் ஆண்டு 'சுதர்சனம்' என்ற படத்தில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து திருமணம், பதி பக்தி, தாய் மகளுக்கு கட்டிய தாலி, பாத காணிக்கை, பணத்தோட்டம், ஆண்டவன் கட்டளை, சித்தி, மகாகவி காளிதாஸ், காவல்காரன், கண்ணன் என் காதலன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
பி.யூ.சின்னப்பா, எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், பாக்யராஜ், அர்ஜுன், கார்த்திக், பிரபு என 5 தலைமுறை நடிகர்களுடன் கரிக்கோல் ராஜு நடித்துள்ளார்.
1960 மற்றும் 70களிலும் அதிகமான படங்கள் நடித்த கரிக்கோல் ராஜு, 1980களில் வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் 'தூறல் நின்னு போச்சு' படத்தில ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ந்து இரட்டை மன்னன், கோழி கூவுது, கீதாஞ்சலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கரிக்கோல் ராஜ் நடித்த கடைசி திரைப்படம் 'நாடு அதை நாடு'. இதில் ராமராஜன் நாயகனாக நடித்திருப்பார்.
ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சி வரை சென்று வருவதாக சொல்லி சென்றவர், சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கும் செல்லவில்லை. வீடும் திரும்பவில்லை. இன்று வரை அவர் எங்கு இருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா? என்ற விபரம் தெரியவில்லை.