பிளாஷ்பேக் : விஜயகாந்தை கேப்டன் ஆக்கியது 'கேப்டன் பிரபாகரன்' அல்ல
விஜயகாந்தின் கேரியரில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த படம் 'கேப்டன் பிரபாகரன்'. இதனை ஆர்.கே.செல்வமணி இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகுதான் விஜயகாந்த் 'கேப்டன்' பட்டத்தை பெற்றார் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை.
இந்த படம் வெளிவருவதற்கு 3 வருடங்களுக்கு முன்பே வெளிவந்த படம் 'செந்தூரப்பூவே'. இந்த படத்தில் விஜயகாந்த் 'கேப்டன் சவுந்தர பாண்டியன்' என்ற ராணுவ அதிகாரியின் கேரக்டரில் நடித்திருந்தார். இளம் காதலர்களான ராம்கி, நிரோஷாவுக்கு உதவி செய்யும் கேரக்டரில் நடித்தார். தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை விஜயகாந்திற்கு வாங்கி கொடுத்த கேரக்டர் இது.
இதன்பிறகு விஜயகாந்த் நடித்த படங்களின் டைட்டில் கார்டுகளில் 'கேப்டன்' என்று அடைமொழி கொடுக்கப்படவில்லை என்றாலும் விஜயகாந்த் ரசிகர்கள் அவரை கேப்டன் என்று அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ரசிகர் மன்ற போஸ்டர்களில் கேப்டன் என்றே குறிப்பிட்டார்கள். 'கேப்டன் பிரபாகரன்' படம் வெளிவந்த பிறக கேப்டன் என்ற பட்டம் இன்னும் விரிவாகி நிலை பெற்றது.
'செந்தூரப்பூவே' படத்தை தேவராஜ் இயக்கினார். ராம்கி, நிரோஷா, சந்திரசேகர், செந்தில், விஜயலலிதா, சி.எல்.ஆனந்தன், ஸ்ரீப்ரியா, சார்லி, சிவராமன், பசி நாராயணன், முரளிதரன், பிரபாகர், அழகு, ஆனந்தராஜ், பக்கோடா காதர், மாஸ்டர் ராஜேஷ், கருப்பு சுப்பையா, குள்ளமணி, வெள்ளை சுப்பையா, கோவை லதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மனோஜ் கியான் இசை அமைத்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றி பெற்றது.