உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சிறுத்தையிடமிருந்து உயிர் தப்பிய எஸ்.எஸ்.ஆர்

பிளாஷ்பேக் : சிறுத்தையிடமிருந்து உயிர் தப்பிய எஸ்.எஸ்.ஆர்

இப்போதுள்ள ஹீரோக்களுக்கு சிக்ஸ் பேக் வைத்துக் கொள்வது ஒரு டிரண்டாக இருப்பது போன்று 1950களின் ஹீரோக்களுக்கு புலி, சிங்கமுடன் சண்டை போடுவது ஒரு டிரண்டாக இருந்தது. ஒரு படத்தில் ஒரு ஹீரோ புலியுடன் சண்டை போட்டால் அதையே விளம்பரமாக செய்து படத்தை ஓட வைப்பார்கள். பி.யூ.சின்னப்பா, எம்ஜிஆர், சிவாஜி, ரஞ்சன் ஆகியோர் சண்டை போட்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தானும் சண்டை போட விரும்பினார் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இதனால் அவர் நடித்த 'பிள்ளைகனியமுது' என்ற படத்தில் ஒரு புலி சண்டை காட்சி வைக்குமாறு இயக்குனர் எம்.ஏ.திருமுருகனை வலியுறுத்தினார். இதனால் கதைக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் அப்படி ஒரு சண்டை காட்சியை வைத்தார். ஒரு இடத்தில் சிறுத்தை தாக்க வருவதாக ஒரு காட்சி வைக்கப்பட்டது.

அப்போது படப்பிடிப்புக்கு விலங்குகளை சப்ளை செய்பவர் புலிக்குட்டி கோவிந்தராஜன். படப்பிடிப்புக்கு முன் எஸ்.எஸ்.ராஜேந்திரனை சந்தித்த அவர், பயப்படாதீங்க, சிறுத்தை வாய் தைச்சாச்சு, நகத்தை வெட்டியாச்சு. நீங்க தைரியமாக சண்டை போடலாம் என்று சொல்ல, அதை நம்பி எஸ்.எஸ்.ராஜேந்திரன் சண்டைபோட களமிறங்கினார்.

காட்சி படமானமோது எஸ்.எஸ்ஆர் சிறுத்தையுடன் கட்டிப்புரண்டார், அதன் முகத்தில் அடித்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல தைக்கப்பட்ட நூல் அறுந்து விட சிறுத்தை நிஜமாகவே எஸ்.எஸ்.ஆரை தாக்கியது. அவரும் அதனிடம் இருந்து தப்பிக்க போராடினார். காட்சி இயல்பாக வருவதாக சுற்றி நின்றவர்கள் நினைத்தார்கள். ஒரு கட்டத்தில் எஸ்.எஸ்ஆரே 'கட் கட்' என்று சொல்லி சிறுத்தையிடமிருந்து காயத்துடன் தப்பினார். பின்னர் மற்றவர்கள் சிறுத்தையை மடக்கி பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். சில நாள் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அந்த படத்தில் நடித்தார் எஸ்எஸ்ஆர்.

பி.எஸ்.வீரப்பா தயாரித்த முதல் படம் இது. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், இ.வி.சரோஜா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !