மலையாளத்தில் கதை நாயகன் ஆகும் யோகி பாபு
4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பரவலான பாராட்டை பெற்ற தமிழ் படம் 'ஆதார்'. ராம்நாத் பழனிகுமார் இயக்கிய இந்த படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா, இனியா நடித்திருந்தார்கள். ஒரு எளிய மனிதன் தனது அடையாளத்திற்காக போராடும் கதை. எளிய மனிதனாக கருணாஸ் நடித்தார்.
தற்போது இந்த படம் மலையாளத்தில் ரீமேக் ஆகிறது. கருணாஸ் நடித்த கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார். இதன் மூலம் மலையாளத்தில் கதை நாயகனாக அறிமுகமாகிறார் யோகி பாபு. தமிழில் இயக்கிய ராம்நாத் பழனிகுமாரே மலையாளத்திலும் இயக்குகிறார். மலையாளத்திலும் 'ஆதார்' என்றே வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராம்நாத் பழனிகுமார் கூறும்போது 2022ம் ஆண்டு 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'ஆதார்' பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் 'ஆதார்' படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன், என்றார்.