அமிதாப் பச்சன் இனியும் இதை தொடரலாமா ? விவாதத்தை துவங்கிய நெட்டிசன்கள்
பாலிவுட்டில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அமிதாப் பச்சன், தற்போதும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.. அதுமட்டுமல்ல, தனது இந்த உயரத்திற்கு ரசிகர்கள் தான் காரணம் என்பதால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டு வாசலில் அவர்களைச் சந்தித்துக் கையசைப்பதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார். அந்த வகையில் நேற்று (ஞாயிறு) அமிதாப்பச்சன் வீட்டின் முன்பு அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமிதாப்பச்சனுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒரு தகவல் வெளியானதைத் தொடர்ந்து அதிக அளவிலான ரசிகர்கள் அங்கே குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கு நின்ற போலீசாரும் பொதுமக்கள் சிலரும் அந்த ரசிகருக்கு முதலுதவி செய்து காப்பாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள வலைப்பதிவில், இந்தக் கடுமையான வெயிலில் என்னைப் பார்ப்பதற்காக மக்கள் மணிக்கணக்காகக் காத்திருக்கிறார்கள். அது சாதாரண விஷயம் அல்ல. அவர்களிடம் எனது பாதுகாப்பு படையினர் அன்போடும் மரியாதையோடும் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். பொதுமக்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பையும் மரியாதையையும் மட்டும்தான் என்று கூறியுள்ளார்.
பல ஹீரோக்கள் தங்களது ரசிகர்களைக் கண்டுகொள்ளாத நிலையில், இத்தனை வயதிலும் அமிதாப் தனது ரசிகர்களை சந்திப்பது நல்ல விஷயம் தான் என்றாலும், அதற்காகக் கூடும் கூட்டத்தால் இந்த வெயில் காலத்தில் ரசிகர்கள் தேவையில்லாத அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. இனிவரும் நாட்களில் அமிதாப்பச்சன் இந்தச் சந்திப்பை மாதத்திற்கு ஒருமுறை என்றோ அல்லது முக்கியமான பண்டிகை நாட்கள், பிறந்த நாட்களிலோ மட்டும் என மாற்றினால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்.