1980களில் பிரபலமாக இருந்த நடிகை பானுப்பிரியாவின் தங்கை நிஷாந்தி. அக்கா நடிக்கும் படங்களில் அவருக்கு துணையாக வந்தவர், பின்னர் துணை இயக்குனரானார். கங்கை அமரன் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தை இயக்கிய போது அவரிடம் துணை இயக்குனர் வாய்ப்பு கேட்டு போனார். அந்த படத்தில் ராமராஜன் நாயகன், ரேகா நாயகி, இன்னொரு நாயகியும் படத்திற்கு தேடியபோது அவர் முன் நின்றவர் நிஷாந்தி. அவரை பார்த்துமே நீதான் என் நாயகி என்று அவரை நடிக்க வைத்து விட்டார் கங்கை அமரன். நிஷாந்தி நடித்த கேரக்டரும், படமும் ஹிட்டானதும் அக்கா போலவே நடிகை ஆகிவிட்டார் நிஷாந்தி.
அதன் பிறகு ஒன்று எங்கள் ஜாதியே, மகராசி, சிவப்பு தாலி, கைநாட்டு, பூவிழி ராஜா, சிம்ம சொப்பனம், அக்னி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். இந்த நிலையில் 1991ம் ஆண்டு ராஜ் சிப்பி இயக்கிய 'சகுந்த்' என்ற படத்தில் தென்னிந்திய கேரக்டரில் நடிக்க ஒரு நடிகை தேவைப்பட்டார். அதற்கு பானுப்ரியா தேர்வாகி இருந்தார். ஆனால் அப்போது தமிழில் பிசியாக இருந்த பானுப்பிரியாவால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் தனது தங்கை நிஷாந்தியை அனுப்பி வைத்தார்.
அவரை ராஜ் சிப்பிக்கு பிடித்து விடவே அந்த படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து மேரே சஞ்னா, சாத் நிப்ஹனா என்ற படத்தில் நடித்தார். அதுவும் ஹிட்டானது. இதனால் நிரந்தரமாக பாலிவுட் நடிகை ஆகிவிட முடிவு செய்த நிஷாந்தி தனது பெயரை சாந்திப்ரியா என்று மாற்றிக் கொண்டு மேலும் சில பாலிவுட் படங்களில் நடித்தார்.
ஆனால் ஒரு கடத்திற்கு மேல் பாலிவுட் வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். இதற்கிடையில் காதலித்து மணந்த பாலிவுட் நடிகர் சித்தார்த் ராயும் இறந்து விடவே சினிமாவை விட்டு விலகினார். பல வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு வெளியான 'பேட் கேர்ள்' என்ற படத்தில் நாயகியின் அம்மாவாக நடித்தார்.
தற்போது தொடர்ந்து ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிற்கு சென்றிருக்காவிட்டால், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருப்பார் என்பார்கள்.