மார்டன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி.
பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம் டிசைனிங்கில் கலக்கிவரும் இவரை மதுரை அம்மன் சன்னதி தெருவில் அடிக்கடி பார்க்க முடியும். அட 'நம்ம ஊரு பொண்ணாமா நீ, சீரியல்ல பின்னி எடுக்குற. வீட்டுக்கு சாப்பிட வா மா' என கடைக்கு வந்திருந்தவர்கள் அவரிடம் வாஞ்சைக் காட்டிய நேரத்தில் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்.
அவர் கூறியதிலிருந்து...
எந்த ஊருக்கு போனாலும் சொந்த ஊர் பாசம் மாதிரி எங்கேயும் வராது. அதற்காக முதலில் நன்றி சொல்கிறேன். நேர்த்தியாக உடை அணிவதில் சிறுவயதிலிருந்தே ஆர்வம். எந்த உடை அணிந்தாலும் வித்தியாசம், நவநாகரீகம், கற்பனை கலந்திருப்பது பிடிக்கும்.
கணவர், மெட்டீரியல் பிசினஸ் செய்வதால் ஆர்டர்கள், கஸ்டமர்கள் கிடைப்பது ஆரி பிளவுஸ், டிசைனர் ஒர்க் செய்யும் எனது தொழிலுக்கு உதவியாக இருக்கிறது. நண்பர் மூலமாக சீரியல் ஷூட்டிங்கில் ஹீரோயினுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதற்காக சென்னை சென்றபோது 'கெஸ்ட் ரோலில்' நடிக்க வைத்தனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அடுத்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்க அழைத்தனர்.
கிடைத்த வாய்ப்பில் புது அனுபவங்களை கற்றுக்கொள்ள நடித்தேன். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்துகிறேன். இதனால் வெளியில் என்னை பார்ப்பவர்கள் கூட டி.வி., சீரியலில் என் கதாபாத்திர தன்மையோடு பார்ப்பதும் ஒருவித பாராட்டாக தெரிகிறது. மூத்த நடிகர்கள் ஓ.ஏ.கே. சுந்தர், வி.ஆர்.திலகம், சிவகவிதா உள்ளிட்டோரின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன்.
அர்ப்பணிப்பு, நடிப்பு ஒழுக்கம், நேரந்தவறாமை என அவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசான்கள். லியோ படத்தில் சின்ன ரோல் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். இனி சின்ன ரோல்களை தவிர்த்து சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்புகள் வந்தால் நடிக்கலாம் என நினைக்கிறேன். சீரியலில் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை.
இங்கு அவரவர் முயற்சிக்கும் திறமைக்கும் ஏற்ற வாய்ப்புகள் நிறையக் கிடைக்கிறது. அதில் வெற்றி தோல்வியை தீர்மானித்து உங்களின் உயரத்தை நீங்களே நிலைநிறுத்த வேண்டும். சீரியலில் நடிக்க, ஆரம்பத்தில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிப்பென்று வந்தபின் நிறைய சுக, துக்கங்களுக்கு செல்ல முடியவில்லை.
நடுத்தர பெண்ணாக தொழில், நடிப்பு, குடும்பம் என மூன்று பக்கத்தையும் சமாளிப்பது சிரமமான விஷயம்தான். கணவரும், மகனும் எனக்கு உறுதுணையாக இருப்பதால் எனக்கு எல்லா கஷ்டங்களும் சுபத்துடனே முடிந்தது. ஆபத்துகளிலும் தர்ம சங்கடமான நிலைகளிலும் எனக்கு விழும் எல்லா 'அடி'களையும் தாங்கும் கார்டியன் ஏஞ்சல் எனது கணவர் என்பதால் அவார்டோ, பாராட்டோ அதை அவருக்குத்தான் சொந்தமாக்க வேண்டும் எனச் சொல்லி சிரித்துக் கொண்டார்.