பழிவாங்கும் எண்ணத்துடன் தான் துரந்தரில் நடித்தேன் : அர்ஜுன் ராம்பால்
கடந்த டிசம்பரில் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான துரந்தர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரே கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் இரண்டு பாகங்களாக மாற்றப்பட்டு தற்போது இரண்டாம் பாகமான துரந்தர் : தி ரிவெஞ்ச் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியானது. முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த வெற்றியால் படத்தில் நடித்துள்ள பல நட்சத்திரங்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். குறிப்பாக இதில் பாகிஸ்தான் நாட்டின் மேஜர் இக்பால் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அர்ஜுன் ராம்பால். இந்த துரந்தர் 2 படத்தின் வெற்றியால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கும் அர்ஜுன் ராம்பால், நிஜமாகவே மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26ல் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் பெர்சனலாக தன்னை எந்த அளவிற்கு பாதித்தது என்றும் அதற்கு மானசீகமாக பழிவாங்கும் விதமாகவே இப்படி ஒரு வாய்ப்பு வந்ததை பயன்படுத்திக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஆச்சரியமாக மும்பையில் 2008ல் நவம்பர் 26ல் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நிகழ்த்திய அன்று தாஜ் ஹோட்டலில் தான் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்திருந்தார் அர்ஜுன் ராம்பால். அன்றைய தினம் குண்டுவெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் ஹோட்டல் அறையிலேயே அடைபட்டு கிடந்து ரொம்பவே மனம் பாதிக்கப்பட்டதாகவும் இயக்குனர் ஆதித்யா தர் இப்படி ஒரு உளவாளி கதையை தன்னிடம் வந்து சொன்னபோது அந்த தாக்குதலுக்கு காரணமான நபர்களை மானசீகமாக பழிவாங்குவது போல இந்த கதை இருந்ததால் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார் அர்ஜுன் ராம்பால்.