உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இனி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பேன் : டாக்டர் ராஜசேகர்

இனி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பேன் : டாக்டர் ராஜசேகர்

தமிழில் இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் என்று அழைக்கப்படும் அளவிற்கு அதிரடியாக பிரபலமானவர் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர். பாரதிராஜாவால் புதுமைப் பெண் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறி கடந்த 2023 வரை கதாநாயகனாகவே நடித்து வந்தார். இரண்டு வருடங்களில் இவர் படம் எதிலும் நடிக்கவில்லை. சொல்லப்போனால் இவரை கதாநாயகனாக வைத்து படம் இயக்க இயக்குனர்கள் பலரும் தயக்கம் காட்டினார்கள் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நல்ல குணசித்திர கதாபாத்திரங்கள் வந்தால் நடிக்கலாம் என்று நினைத்த நேரத்தில் தான், பைக்கர் படத்தின் கதையை இயக்குனர் அபிலாஷ் ரெட்டி ராஜசேகரிடம் கூறியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக சர்வானந்த் நடிக்க அதில் அவரது தந்தையாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் தான் ராஜசேகர் நடித்துள்ளார். இனி அடுத்தடுத்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவர் கவனம் செலுத்த இருக்கிறாராம்.

இந்த மாற்றம் குறித்து டாக்டர் ராஜசேகர் கூறும்போது, “இந்த படத்தில் நடிக்கும்போது சர்வானந்த் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறோமே என்கிற எண்ணம் ஏற்பட்டது உண்மை. ஆனால் என் மனைவியும் குழந்தைகளும் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்தான் என என்னை உற்சாகப்படுத்தினார்கள். சமீபத்தில் ஒரு தியேட்டருக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த சிலர் என்னை எந்த படத்தில் நடிக்கிறீர்கள் என கேட்டபோது பைக்கர் என்று சொன்னேன். ஓ சர்வானந்த் படமா என்று அவர்கள் கேட்டபோதுதான், ஆமாம் இது அவர் படம் தானே.. நான் ஒரு முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் தானே நடிக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.

அந்த தருணத்தில் என்னுடைய திரையுலக பயணத்தில் முக்கியமான ஒரு மாற்றத்திற்கு நான் நகர வேண்டியதை உணர்ந்தேன். அதனால் இயக்குனர்கள் இனி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை எழுதும்போது என்னை மனதில் வைத்துக் கொண்டு கதைகளை எழுதலாம்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !