'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா
தெலுங்கு படத்தில் அறிமுகமாகி 'எமகாதகி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் ரூபா கொடுவாயூர். இந்த படத்தில் அவர் பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடித்திருந்தார். இதில் அவர் நடிப்பும், உழைப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. படமும் நல்ல வரவேற்பை பெற்றது. என்றாலும் அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு அமையவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கிற்கு திரும்பினார். இந்த நிலையில் இலங்கை தமிழர்களின் வாழ்கை மையமாக வைத்து உருவாகி உள்ள 'நீளிரா' என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் இந்தப் படத்தை, சோமிதரன் இயக்கி உள்ளார். நவீன் சந்திரா, சனந்த், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதுகுறித்து ரூபா கொடுவாயூர் கூறும்போது எமகாதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படத்தை போல் இந்த திரைப்படமும் எனக்கு ஸ்பெஷலானது. எனக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த படம் ஸ்பெஷலானது. நமக்கு போரைப் பற்றி என்ன தெரியும் என்றால் போர் என்றால் ஆயுதம் இருக்கும், துப்பாக்கி இருக்கும், போராட்டம் இருக்கும் என தெரியும். ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள். அதை பற்றி பேச நினைத்த திரைப்படம் தான் நீளிரா. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நீண்ட இரவில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து எதுவும் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போதும் உங்கள் நினைவுகளில் இந்த நீளிரா இருக்கும். '' என்றார்.