தனது பாடல்கள் காப்புரிமை விவகாரம் : டி ராஜேந்தர் வழக்கு
டி.ராஜேந்தர் இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்த படம் 'உயிருள்ளவரை உஷா'. கடந்த 1983ம் ஆண்டு வெளியான இந்தப்படம், கடந்த பிப்ரவரி மாதம் மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்தப் படத்தின் பாடல்களின் உரிமம் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்தது. பின்னர் அந்த உரிமம் டபிள்யூ.எல்.எபிக் மீடியா என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் 'உயிருள்ளவரை உஷா' படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி வர்த்தக ரீதியாக பயன்படுத்த ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல்.எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கக் கோரி டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏப்ரல் 20ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஏ.வி.எம். மற்றும் டபிள்யூ.எல்.எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.