திரையுலகினர் அனைவரையும் 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி
'காந்தாரா' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் கன்னட இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி. சில வாரங்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் 'காந்தாரா' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தை அவர் அன்பாலோ செய்தார். அதற்கடுத்து அவருடன் இணைந்து பணியாற்றிய நடிகை ருக்மிணி வசந்த் மற்றும் நடிகர் ராஜ் பி ஷெட்டி ஆகியோரை 'அன்பாலோ' செய்தார்.
அடுத்தடுத்து அவருடன் இணைந்து பணியாற்றியவர்களை அவர் 'அன்பாலோ' செய்தது கன்னடத் திரையுலகத்தில் மட்டுமல்லாது ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அவர் திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரையும் 'அன்பாலோ' செய்துவிட்டார். அவர் 140 பேர் வரை இதுவரையில் பாலோ செய்து வந்திருக்கிறார்.
தற்போது அவரது மனைவி பிரகதி, அவரது தயாரிப்பு நிறுவனமான ரிஷப் ஷெட்டி பிலிம்ஸ், அவரது அறக்கட்டளையான ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை ஆகியவற்றை மட்டுமே பின்தொடர்கிறார்.
அடுத்தடுத்து 'அன்பாலோ' செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியதால் இப்படி மொத்தமாக 'அன்பாலோ' செய்துவிட்டாரா அல்லது தனது கணக்கை 'க்ளீன் அப்' செய்கிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.