'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தில் நடிக்க மாட்டேன்: ஆண்ட்ரியா ஓபன் டாக்
கடந்த 2010ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. இப்படம் வெளியானபோது பெரிதளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகே ரசிகர்கள் பலரும் படத்தை சிலாகித்து கொண்டாடினர். இதனால் ரீ ரிலீசும் செய்யப்பட்டது. ரசிகர்களின் திடீர் ஆதரவை தொடர்ந்து, 'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் உருவாகும் என தெரிவித்தார் இயக்குனர் செல்வராகவன்.
இதனை 2021ம் ஆண்டு அறிவித்து, 2024ல் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அப்போதே அப்டேட் கொடுத்தார். ஆனால் இதுவரையிலும் அப்படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகவில்லை, வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில், நடிகை ஆண்ட்ரியாவிடம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் உருவானால் நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ஆண்ட்ரியா அளித்த பதில்: ஆயிரத்தில் ஒருவன் 2-ல் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். அந்தப் படம் உருவாவதில் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் அதில் நான் இருக்க மாட்டேன். இதற்குக் காரணம், இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரிவது மிகவும் கடினமான ஒன்று. ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக மட்டும் 200 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த படத்திற்கு பிறகு வந்த மற்ற படங்களும் கதாபாத்திரங்களும் இந்த அனுபவத்தால் எனக்கு எளிமையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.