உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கரிகாலன்' படம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதா?

'கரிகாலன்' படம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதா?

இந்தியத் திரையுலகத்தில் எப்போதாவது சரித்திரப் படங்கள் வந்தாலும் 'பாகுபலி 1, 2' படங்களுக்குப் பிறகுதான் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அந்தப் படங்கள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அதன்பின் அவ்வப்போது சரித்திரப் படங்கள் வெளியாகி வருகின்றன.

'பாகுபலி' படங்களுக்கு முன்பாக தமிழில் 2012ல் ஆரம்பிக்கப்பட்ட சரித்திரப் படம் 'கரிகாலன்'. விக்ரம், ஜரீன் கான், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்க எல்.ஐ.கண்ணன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சோழ மன்னன் கரிகாலன் பற்றிய படமாக அந்தப் படம் உருவாக இருந்தது. அந்தப் படத்திற்கு மொத்த ஸ்கிரிப்ட்டையும் எழுதியவர் 'செல்லமே' படத்தின் இயக்குனர் ஏஆர்.காந்தி கிருஷ்ணா. கண்ணன் ஆரம்பித்த படம் பின்னர் காந்தி கிருஷ்ணா பக்கம் வந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் படம் 'டிராப்' ஆனது.

ஏஆர்.காந்திகிருஷ்ணா அதன்பின் 'ஆனந்த தாண்டவம்' படத்தை இயக்கினார். சுமார் 17 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'பிக் பாஸ்' புகஷ் ராணவ், ரோஸ்மின், கஸ்தூரி மற்றும் பலர் நடிக்க 'பிரேக் பாஸ்ட்' படத்தை இயக்கி முடித்துள்ளார். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் 'கரிகாலன்' படம் பற்றிய கேள்வி வைக்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “கரிகாலன்' படம் போன்ற சில அற்புதமான ஸ்கிரிப்ட் என்னிடம் உள்ளது. அம்மாதிரியான படங்களை அனுபவித்து எழுதியதால் நான் மட்டுமே அந்தப் படங்களை இயக்க முடியும். சில கதைகளை வேண்டுமானால் மற்றவர்கள் இயக்கலாம். ஆனால், நான் எழுதும் கதைகளை நானே இயக்க வேண்டும், அப்போதுதான் அது சரியாக அமையும்,” என்றார்.

'கரிகாலன்' படத்தில் உள்ள சிக்கல்களை நீக்கி யாராவது அதைப் படமாக்க முன் வந்தால் தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு படமாக அமையலாம். அப்படம் பற்றி அறிவிக்கப்பட்ட போது வெளியான போஸ்டர்களே படம் மீதான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் நல்லபடியாக முடிந்து வந்திருந்தால் 'பாகுபலி' படங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் தடம் பதித்திருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !