மகளின் பள்ளி தோழிகளுக்காக போட்டோகிராபராக மாறிய ஐஸ்வர்யா ராய்
உலக அழகி என்கிற பட்டத்துடன் சினிமாவில் நுழைந்து அங்கேயும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன்பிறகு நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்த அவர் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இன்னொரு பக்கம் தனது மகள் ஆராத்யாவின் படிப்பு மற்றும் வளர்ச்சியில் ஒரு தாயாக கவனம் செலுத்தி குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா தனது பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாவை முடித்துவிட்டு சமீபத்தில் மும்பை திரும்பினார்.
அவரை வரவேற்பதற்காக ஒரு தாயாக விமான நிலையத்தில் வரவேற்பு வாயிலில் காத்திருந்தார் ஐஸ்வர்யா ராய். தன்னை வரவேற்க அம்மாவே வந்திருப்பதை பார்த்து சந்தோஷத்தில் குதித்து வந்து அவரை கட்டிப்பிடித்தார் மகள் ஆராத்யா. அதனைத் தொடர்ந்து மகளின் தோழிகள் அனைவரையும் குரூப் போட்டோ எடுப்பதற்காக ஒன்றாக நிற்கச் சொல்லி தானே புகைப்படம் எடுத்துக் கொடுத்து அவர்களையும் சந்தோஷப்படுத்தினார் ஐஸ்வர்யா ராய். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.