‛ஜனநாயகன்' படம் ‛லீக்' : எடிட்டர் பிரதீப் ராகவ் இடைநீக்கம்
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் ரிலீஸாகவில்லை. தேர்தல் வேறு வந்ததால் படம் வெளியீடு தாமதமாகி உள்ளது. இதற்கிடையே ஏப்ரல் முதல் வாரத்தில் இணையதளத்தில் படம் லீக்கானது. அதற்கு படத்தின் எடிட்டர் தரப்பு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஜனநாயகன்படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் குழுவில் இருந்து தான் அந்த லீக் நடந்து இருப்பதாக கூறப்பட்டது அதைத் தொடர்ந்து அவர் டீமில் பணியாற்றிய ஒப்பந்த எடிட்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவை தங்கள் சங்கத்திலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்வதாக சினிமா எடிட்டர் சங்கம் கூறியுள்ளது. படம் லீக் ஆனதற்கு அவர் பொறுப்பல்ல என்றாலும் அவர் கவனம் குறைவும் காரணம் என்பதால் இந்த நடவடிக்கை என்று எடிட்டர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து எடிட்டர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகம் உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது. மேலும் ஜனநாயகம் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டி உள்ளது. ஏப்., 17 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பிரதீப்பை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் இடை நீக்கம் செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த இடைநீக்க காலத்தில் சங்கம் அவருக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்காது என தெரிவிக்கிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.