உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம்

பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம்

தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முதன்மை நாயகனாக விளங்கியவர் டி.ஆர்.மகாலிங்கம். மகாலிங்கத்தின் கடைசி ஹிட் படங்களில் ஒன்று 'ஆட வந்த தெய்வம்'. இதில் மருதூரைச் சேர்ந்த மிட்டாதாராக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். ஆடல், பாடல் கலைகளில் நுட்பமான ரசனை கொண்டவர். அவருக்கு பூஞ்சோலையைச் சேர்ந்த பைரவி என்ற தெரு நடனக்காரியின் மேல் மையல் தோன்றும். ஆனந்தனின் அம்மா, தனது அண்ணன் சிங்காரத்தின் மகள் கல்யாணியை ஆனந்தனுக்கு மணம் முடிக்க நினைப்பார். எல்லா கதையிலும் ஆசைக்கு அணை போட ஒரு வில்லன் இருக்கத்தானே செய்வான். இதில் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது, கல்யாணியின் மீது மோகம் கொண்ட மலையப்பன் (எம்ஆர் ராதா) . இவர்களைச் சுற்றி நடக்கும் கதை.

இதில் கல்யாணியாக அஞ்சலி தேவி நடித்தார். அவரது நடனத்திறமையை வெளிக்கொணர்வதற்காகவே எழுதப்பட்ட கதாபாத்திரம். மலையப்பனாக தான் வரும் காட்சியில் எல்லாம் அப்ளாஸ் அள்ளினார் எம்.ஆர்.ராதா. படத்தில் தான் பாடுவதாக அமைந்த அனைத்துப் பாடல்களையும் டி.ஆர்.மகாலிங்கமே பாடினார்.

பத்மினி, வைஜெயந்திமாலா போன்று தனது நடிப்பு நடனத் திறனை வெளிப்படுத்தும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற அஞ்சலி தேவியின் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவடைந்தது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களிலும் அஞ்சலிதேவியின் நடனமே பிரதானமாக இடம்பெற்றது.

எல்லார் ரவி எழுதிய 'கலீர் கலீர்' என்ற நாவலைத் தழுவி இந்தப் படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். மெஜஸ்டிக் ஸ்டுடியோ முத்துக்கருப்ப ரெட்டியார் படத்தைத் தயாரிக்க, இந்திரா பிலிம்ஸ் வெளியிட்டது. கே.வி.மகாதேவன் இசையில் மருதகாசி எழுதிய 12 பாடல்களும், அஞ்சலி தேவி, சரோஜாவின் நடனங்களும், டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஆர்.ராதா ஆகியோரின் நடிப்பும் 'ஆட வந்த தெய்வத்தை' வெற்றிப் படமாக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !