ஏலகிரி மக்களின் வாழ்க்கையை பேசும் படம்
டாம்ஸ் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் சார்பில் தமிழ்வாணன் தயாரிக்கும் படம் ஒன்று ஏலகிரி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. 'போங்கு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தாஜ் இயக்குகிறார். படத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் கதைநாயகனாக நடிக்கிறார், அபிராமி கதை நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சிஎஸ்கே சரவணன், பிக் பாஸ் பிரவீன், ஜெய்பீம் மொசக்குட்டி, அகத்தியன், விஜயலக்ஷ்மி, கவுசல்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேவசூர்யா ஒளிப்பதிவு செய்கிறார், ஜொன்ஸ் ரோபட் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் கூறியதாவது : மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படமானது, இம்மக்களுக்கு நடந்த அநீதியை உண்மை தன்மை மாறாமல் உருவாக்கப்பட்டது. இவர்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த மக்களின் குரலாக உணர்வுபூர்வமாக காட்டப்பட்டுள்ளது
இம்மக்களுக்கு படிப்பு மற்றும் விளையாட்டு துறையில் திறமை இருந்தும் இவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் அடையாளம் அதிகாரவர்க்கத்தால் எவ்வாறு தடைபடுகிறது. அதனை மீறி அவர்கள் அதில் சாதித்த பின்னரும் அவர்களின் வாழ்வாதாரம் எந்தளவு மாற்றம் கொண்டுள்ளது என்பது பற்றிய திரைப்படம் தான் இது. வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறும் இந்த தேசத்தில் ஏதோ ஒரு ஒடுக்குமுறை ஒளிந்துகொண்டிருப்பதை ஒளித்திரையில் மறைவின்றி பிரதிபலிக்கும் நோக்கமே இந்த படம். என்றார்.