தனது அனுபவங்களை படமாக இயக்கும் அரசு அதிகாரி
எஸ்.ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ். ராம்பிரகாஷ் தயாரிக்கும் படம் 'எனிமி ஆப் தி ஸ்மக்ளர்', ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி (இந்திய வருவாய் பணி) தோ.சமய முரளி இயக்குகிறார். சுங்கத்துறை விசாரணைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜே.டி.சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் டி.சமய முரளி கூறுகையில், எனிமி ஆப் தி ஸ்மக்ளர்' நான் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை. கடத்தல், நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் செயல்பாடுகளை சுவாரசியமான சினிமா மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் சுங்கத்துறை வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தப் படத்தின் நோக்கம்.
சென்னையின் குடிசைப் பகுதியைச் சேர்ந்த அமர் மற்றும் தீனா என்ற இரண்டு இளைஞர்கள் வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற கனவுடன் வாழ்கின்றனர். லிங்கம் என்ற நிழல் உலக தாதா, பெருமதிப்புள்ள போதைப்பொருளை குஜராத் துறைமுகம் வழியாகக் கடத்தும் பெரிய பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கிறார்.
இந்த போதைப்பொருள் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணா களமிறங்குகிறார். லஞ்சம், வஞ்சம் என உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்ளும் அந்த இரு இளைஞர்களின் பயணமே படத்தின் மையக்கதை. அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் யதார்த்தம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நாட்டிற்காக பணியாற்றும் சுங்கத்துறையின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டும் விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகி வருகிறது, என்றார்.