உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சிறப்பு குழந்தைகள் பற்றி பேசிய படம்

பிளாஷ்பேக் : சிறப்பு குழந்தைகள் பற்றி பேசிய படம்

2000மாவது ஆண்டுக்கு முன்பு வரை சிறப்பு குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இருந்ததில்லை. சவலை பிள்ளை, பைத்தியக்கார குழந்தை என்றே அவர்களை சமூகம் அழைத்தது. சிறப்பு குழந்தையை மையமாக வைத்து கவனம் ஈர்த்த படம் 'அஞ்சலி'. சிறப்பு குழந்தைகள் பற்றிய ஒரு ஆங்கில புத்தகத்தை படித்த மணிரத்னத்திற்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான படம்தான் 'அஞ்சலி'.

இந்த படத்தை அவர் 90களின் துவக்கதில் உருவாக்கினார். மூன்று தேசிய விருதுகளைப் பெற்றதோடு இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதிற்கு அனுப்புவதற்காகத் தேர்வும் செய்யப்பட்டது. 'சிறந்த குழந்தை நட்சத்திர' விருதை ஷாம்லி பெற்றார்.

சிறப்புக் குழந்தைகளை அவர்களின் குடும்பமும், சமூகமும் இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னது படம். இதனை வணிக ரீதியான படமாக சொன்னதில்தான் மணிரத்னத்தின் திறமை இன்னும் அதிகமாக உணரப்பட்டது.

தனது குழந்தை சிறப்பு குழந்தையாக பிறந்திருப்பதை அறியும் தந்தை அதனை காப்பகத்தில் விட்டு விட்டு குழந்தை இறந்து பிறந்ததாக மனைவியிடம் பொய் சொல்லி விடுகிறார். ஒரு நாள் இந்த உண்மை தாய்க்கு தெரியவரும்போது எப்படியிருந்தாலும் அது என் குழந்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அந்த குழந்தையை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறாள் தாய். பிறகு அந்த குழந்தையை குடும்பமும், சமூகமும் எப்படி ஏற்கிறது என்பதுதான் படம்.

ரகுவரன், ரேவதி, விகே ராமசாமி, ஜனகராஜ், பூர்னம் விஸ்வநாதன், சாருஹாசன் உள்ளிட்டோருடன் சிறப்பு தோற்றத்தில் பிரபு, சரண்யா நடித்தனர். குழந்தைகளாக பேபி ஷாமிலி, தருண், ஸ்ருதி, ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. படமும் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !