விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய ஒரு பேச்சு மிகவும் வைரலாகியது. 'லீடர்ஷிப்' என்பதைப் பற்றிய பொதுவான பேச்சு அது. அந்த வாரத்திற்கான அந்த நிகழ்ச்சியில் 'லீடர்' ஆகப் பணியாற்றியவர் குறித்து விஜய் சேதுபதி முன் வைத்த வாதம் அது.
ஆனால், விஜய் சேதுபதி, தமிழக முதல்வர் விஜய்யைக் குறித்துத்தான் அப்படி பேசினார் என தவெக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்கள் விஜய் சேதுபதியின் தனிப்பட்ட வாழ்க்கை வரையிலான விமர்சனமாகவும் எல்லை மீறிய ஒன்றாக இருந்தது.
தமிழக முதல்வர் விஜய், நடிகராக அவரது முன்னாள் போட்டியாளரான அஜித் இருவரும் லண்டனில் நடைபெற்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்வு, அதன் புகைப்படங்கள் எவ்வளவு வைரலானதோ அதே அளவிற்கு விஜய் சேதுபதி பேசியதும் வைரலானது.
இது குறித்து விஜய் சேதுபதி எந்தக் கருத்தையும் முன் வைக்காத நிலையில் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி விளக்கம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியிட்டது.
அதில், “பிக் பாஸ் தமிழ் சீசன் 10 என்பது, அதற்கென நிறுவப்பட்ட வடிவம், கருப்பொருள்கள் மற்றும் விளையாட்டுச் சூழலின் கட்டமைப்பிற்குள் வழங்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.
நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள், கருத்துக்கள் மற்றும் பிரச்னைகள் ஆகியவை விளையாட்டின் ஒரு பகுதியாகும். அவை நிகழ்ச்சியில் நிகழும் சூழலிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். நிகழ்ச்சியில் வெளிப்படும் கருத்துக்கள், சம்பவங்கள் வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபரையோ, அமைப்பு மற்றும் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ, அங்கீகரிப்பதாகவோ அல்லது கருத்துத் தெரிவிப்பதாகவோ கருதப்படக் கூடாது. நிகழ்ச்சி மற்றும் அதில் நடக்கும் அனைத்தையும் பொழுதுபோக்காவே கருத வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியை நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் முன்பு தொகுத்து வழங்கிய போது கூட அரசியல் சார்ந்த கருத்துக்களை முன் வைக்கிறார் என்ற விமர்சனம் வெளியானது.