ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம்-2
கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்திருந்த இந்தப்படம் அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மற்றும், இந்தியிலும் மட்டுமல்லாது சீன மொழியிலும் கூட ரீமேக் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம்-2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த அதே கூட்டணி தான் இந்தப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழ்நிலையில் தற்போது இந்தப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் தனது ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன-5 முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிட கேரள அரசு அனுமதித்து உள்ள நிலையில் த்ரிஷயம் படக்குழுவினரிடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 50 சதவீதம் மட்டுமே அனுமதி என்பதால் எதிர்பார்த்த வசூலையும் லாபத்தையும் ஈட்டமுடியாது என்பதால் ஒடிடியில் படத்தை வெளியிடும் முடிவை எடுத்துள்ளனராம்.