உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துருவ் விக்ரம் நாயகிக்கு புதுவகை கொரோனா : சிகிச்சைக்கு வர மறுத்து அடம்

துருவ் விக்ரம் நாயகிக்கு புதுவகை கொரோனா : சிகிச்சைக்கு வர மறுத்து அடம்

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாக ஆதித்ய வர்மா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பனிதா சந்து. லண்டனை சேர்ந்த இவர் தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். லண்டனில் வசிக்கும் அவர் படப்பிடிப்பு இருந்தால் இந்தியா வந்து திரும்புவார்.

தற்போது அவர் கவிதா அண்ட் தெரசா என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கோல்கட்டாவில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள கடந்த மாதம் 20ந் தேதி லண்டனில் இருந்து கோல்கட்டாவந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை. அதனால் அவர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார்.

ஆனால் அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஒரு இளைஞருக்கு லண்டனில் பரவும் புதுவகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பனிடா சந்துவை மீண்டும் பரிசோதிக்க கோல்கட்டா சுகாதாரத்துறை முடிவு செய்து, படப்பிடிப்பில் இருந்த அவரை ஆம்புலன்சின் ஏற்றி கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை என்று ஆம்புலன்சில் இருந்தே இறங்க மறுத்து விட்டார். இதையடுத்து இங்கிலாந்து தூதரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பனிதா சந்து சிகிச்சை பெற்று வருகிறார். பனிதாவுக்கு புதுவகை கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !