குட்டி ராதிகா போலீசில் ஆஜராக சம்மன்
பெங்களூரு நாகரபாவியை சேர்ந்தவர் யுவராஜ் . ஜோதிடரான இவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சமீபத்தில் கைதானார். விசாரணையில் கன்னட நடிகை குட்டி ராதிகாவிற்கு 1.25 கோடி கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து இது தொடர்பாக போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் குட்டி ராதிகாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள குட்டி ராதிகா, யுவராஜ் எங்கள் குடும்ப ஜோதிடர், அவரிடம் கேட்டுத்தான் நாங்கள் எந்த காரியத்தையும் தொடங்குவோம். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடந்திருக்கிறது. அவர் தற்போது மோசடி வழக்கில் கைதாகி இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யுவராஜ் ஒரு சரித்திரப் படம் தயாரிப்பதாக இருந்தார். அதில் நான் நடிக்க ஒப்பந்தமானேன். எனக்கு சம்பளமாக பேசப்பட்ட தொகைக்கு முன் பணமாக 1.25 கோடியை 2 தவணையாக கொடுத்துள்ளார். இதுதவிர மற்ற அவரது வரவு செலவுகள் எதுவும் எனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார்.
தமிழில் இயற்கை உள்பட பல படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். முன்னாள் முதல்வர் குமாரசமாமியின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.