நாளை பா.ஜ.வில் இணையும் சிவாஜி மகன், பேரன்
மறைந்தந நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரும், அவரது மகன் துஷ்யந்த்தும் நாளை(பிப்., 11) மாலை பா.ஜ.வில் இணைகின்றனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மறைந்த இந்திரா, காமராஜர் போன்றவர்கள் தலைமையில், காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றினார். அவர்களின் மறைவுக்கு பின், காங்கிரசில் முக்கியத்துவம் கிடைக்காததால் வெளியேறி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற, தனி கட்சியை துவக்கினார்.
கடந்த, 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து, போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தோல்விக்கு பின், கட்சியை கலைத்து, வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின், தமிழக தலைவராக இருந்தார். பின், நிரந்தரமாக அரசியலை விட்டு ஒதுங்கினார். சிவாஜியின் மறைவுக்கு பின், அவரது இளைய மகன் பிரபுவை, காங்கிரஸ் கட்சியில் சேர்க்க முயற்சி நடந்தது; பிரபு மறுத்து விட்டார்.
இந்நிலையில், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தன் மகன் துஷ்யந்துடன், பா.ஜ.,வில் இணைய இருப்பதாக நேற்று முதல் செய்திகள் பரவின. இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த, பா.ஜ., நிர்வாகிகளுடன், ராம்குமார், சமீபத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தச்சூழலில் நாளை(பிப்., 11) மாலை 4.30 மணிக்கு சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ. அலுவலகத்திற்கு செல்லும் ராம்குமார் மற்றும் துஷ்யந், தங்களை அக்கட்சியில் இணைத்து கொள்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.