உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 53 நாடுகள், 92 படங்கள் : சென்னை சர்வதேச திரைப்பட விழா 18ந் தேதி தொடங்குகிறது

53 நாடுகள், 92 படங்கள் : சென்னை சர்வதேச திரைப்பட விழா 18ந் தேதி தொடங்குகிறது

இந்திய திரைப்பட திறனாய்வு குழுவும், தமிழக அரசும் இணைந்து ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் விழா தள்ளிவைக்கப்பட்டது. இதனால் வருகிற 18ந் தேதி, சென்னை சத்யம் தியேட்டரில் சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது.

உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன. பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (சத்யம்) சினிமாஸ் , சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரீன் திரைகள் மற்றும் காசினோ சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படும்.

சென்னை மற்றும் டில்லியில் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களின் உயரதிகாரிகள் திரைப்பட விழாவில் விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். தொடக்க திரைப்படமாக பிரான்சு நாட்டின் 'தி கேர்ள் வித் ஏ பிரேஸ்லெட்' மற்றும் நிறைவு திரைப்படமாக ஜெர்மனி நாட்டை சேர்ந்த 'ஐ வாஸ், ஐ ஆம், ஐ வில் பி' படமும் திரையிடப்படுகிறது.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களான ஆப்பிள்ஸ், குவூ வாடிஸ், ஆய்டா?, லிஸன், தி ஸ்லீப் வாக்கர்ஸ், ஆக்னெஸ் ஜாய், ரன்னிங் அகைன்ஸ்ட் தி விண்ட் மற்றும் ரன்னிங் டு தி ஸ்கை ஆகியவை திரையிடப்படுகிறது.

.தமிழ் திரைப்படங்களுக்கான போட்டிக்காக லேபர், கல்தா, சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மழையில் நனைகிறேன், மை நேம் இஸ் ஆனந்தன், காட்பாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, சீயான்கள், 'சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம் மற்றும் 'கன்னி மாடம் படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. விழா 25ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !