கமல்ஹாசன், மோகன்லால் ஒப்பீடு ஆரம்பம்?
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த, 'த்ரிஷ்யம் 2' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தைப் பற்றித்தான் தற்போது அதிகம் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
'த்ரிஷ்யம்' படத்தின் முதல் பாகத்தை கமல்ஹாசன், 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். அப்போதே 'த்ரிஷ்யம்' ஜார்ஜ்குட்டி மற்றும், 'பாபநாசம்' சுயம்புலிங்கம் பற்றிய ஒப்பீடு நடந்தது. இப்போது இரண்டாம் பாகமும் வந்துவிட்டது. இரண்டாம் பாகத்திலும் மோகன்லாலின் யதார்த்த நடிப்பைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 'த்ரிஷ்யம் 2' படத்தை கமல்ஹாசன் ரீமேக் செய்தால் மோகன்லால் அளவிற்கு யதார்த்தமாக நடிப்பாரா என்ற விவாதமும், ஒப்பீடும் சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
மலையாள சினிமா ரசிகர்களுக்கும், கமல்ஹாசன் ரசிகர்களுக்கும் இடையே இது பற்றி காரசாரமான மோதல் நடந்து வருகிறது. 'பாபநாசம் 2' வருமா, வராதா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஆனால், அதற்குள்ளாகவே சண்டையை ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனிடையே, மோகன்லால், கமல்ஹாசன் பற்றி 'த்ரிஷ்யம், பாபாநாசம்' படங்களின் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். “மோகன்லால் ஒரு பிறவி நடிகர். அவருக்குள்ளேயே யதார்த்தம் கலந்திருக்கிறது. கமல்ஹாசன் ஒரு பயிற்சி பெற்ற நடிகர். அவர் யதார்த்தத்தை தன் கதாபாத்திரத்திற்குள் கொண்டு வருவார்,” எனக் கூறியுள்ளதாகப் பகிர்ந்துள்ளார்கள்.
மற்ற மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ஒரு படத்தை ரீமேக் செய்தாலே ஒப்பீடு என்பது கண்டிப்பாக வரும். 'பாபாநாசம் 2' வருவதற்கு முன்பாகவே இந்த ஒப்பீடு ஆரம்பமாகியுள்ளது ஆச்சரியமானதுதான்.